1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (18:03 IST)

கூட்டணி குறித்து தில்லியில் பேச்சுவார்த்தையா? - தேமுதிக மறுப்பு

தில்லியில் பாஜக தலைவர்களை தேமுதிக குழு ஒன்று சந்தித்துப் பேசுகிறது என்று செய்திகள் வெளியாகின. அதை உடனடியாக தேமுதிக மறுத்துள்ளது.
 

 
தில்லியில் பாரதீய ஜனதா தலைவர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோரை தேமுதிக குழு திங்களன்று பிற்பகல் சந்தித்துப் பேசுகிறது என்று ஏ.என்.ஐ. டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து தமிழக ஊடகங்களிலும் இந்த தகவல் வெளியானது. ஆனால் இதனை தேமுதிக மறுத்துள்ளது.
 
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தில்லி சென்று யாரையும் சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மறுத்துள்ளது.
 
தில்லி சென்றதாக கூறப்படும் இளைஞரணி செயலாளர் சுதீஷ், சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் தேமுதிக கூறியுள்ளது.