1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 9 மார்ச் 2016 (15:44 IST)

ரிஷிவந்தியத்தில் செல்வாக்கை இழந்த விஜயகாந்த்: திருக்கோயிலூரில் போட்டி?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால், அவர் திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


 
 
ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிகவை விட அதிமுக-விற்கே அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. 2011 ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்த ரிஷிவந்தியம் முன்னாள் உறுப்பினர் சிவராஜுக்கும் அந்த தொகுதியில் செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் இதே தொகுதியில் விஜயகாந்த் மீண்டும் போட்டியிட்டால் அவரது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேமுதிக வட்டாரம் நினைக்கிறது.
 
இதனையடுத்து அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இங்கு தேமுதிகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேமுதிக 18 சதவீத வாக்குகளை பெற்றது.
 
திமுக, தேமுதிக கூட்டணி அமைந்தால் அந்த தொகுதி விஜயகாந்துக்கு கிடைப்பதிலும் சிறிய சிக்கல் இருக்கிறது. இதே தொகுதியை தான் திமுகவின் பொன்முடியும் குறிவைத்துள்ளார். பொன்முடி அந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர். எனவே தேமுதிக, திமுக கூட்டணி அமைந்தால் இரு கட்சிகளுமே இந்த தொகுதிக்கு மல்லு கட்டும் என கூறப்படுகிறது.