வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (13:03 IST)

விஜயகாந்துக்கு ஓர் சாட்டையடி கடிதம்: ரூ.500 கோடி பணம் எங்கே?

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தேமுதிகவை சேர்ந்த 14 மாவட்ட செயலாளர்கள் பகிரங்க கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.


 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவால் அந்த கட்சி இன்று காலியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து படு தோல்வியடைந்தது தேமுதிக.
 
தேர்தலுக்கு முன்னர் ஆரம்பித்த தேமுதிக நிர்வாகிகளின் கட்சி தாவல் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனைகளை நடத்தி வந்த விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
 
இந்நிலையில் மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக போர்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில் விஜயகாந்தை சரமாரியா கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அந்த கடிதத்தில், கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு கட்சியில் இணைந்தோம். ஆனால் தற்போது நீங்களே ஒரு சிலரை நம்பித்தான் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு, தேமுதிக பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தேமுதிக இருக்கிறது.
 
2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்வர்களில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009-ல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா?. 2005-இல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.
 
சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணத்தை கொடுக்கவில்லை. உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த திமுகவை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு திமுகவை எதிர்த்தோம்.
 
உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக திமுகவையும், அதிமுகவையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-ல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுகவோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள். ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள்.
 
2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். தேமுதிக டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.
 
கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா?. தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத் தான் லாபம்.
 
உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா?, அதன் விளைவு 10.5 சதவீதமாக இருந்த வாக்கு 2.5 சதவீதமாகி போனது. திமுக நம்மால் தோற்று விட்டதல்லவா, திமுகவால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.
 
இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தேமுதிகவில் இருக்க வேண்டுமா? நீங்களே தேமுதிக கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.