1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (15:52 IST)

சசிகலாவிடம் கொந்தளித்த திவாகரன் தரப்பு: விவேக் வரவே கூடாது!

சசிகலாவிடம் கொந்தளித்த திவாகரன் தரப்பு: விவேக் வரவே கூடாது!

அதிமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக இளவரசியின் மகன் விவேக்கை சசிகலா நியமிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் உலா வருகிறது. இந்நிலையி இதற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை சசிகலாவிடம் அவரது தம்பி திவாகரன் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வர் பதவியில் அமர கானவு கண்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறையில் அடைக்கப்படும் முன்னர் சசிகலா தனது அக்கா மகன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுகவை தினகரன் ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
 
ஆர்கே நகர் தேர்தலில் சசிகலாவின் புகைப்படத்தையும், அவரது பெயரையும் முற்றிலுமாக புறக்கணித்தார் தினகரன். இந்நிலையில் அவரும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். மேலும் அவர் மீதான பெரா வழக்கு தீர்ப்பும் வர இருக்கிறது.
 
இந்நிலையில் நிலையான தலைமையில்லாமல் அதிமுக உள்ளதால் இளவரசியின் மகன் விவேக்கை அதிமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆதரவை கட்சியில் பெற விவேக் முயற்சி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வருகிறது.
 
ஆனால் இதற்கு திவாகரன் தரப்பு கடுமையான ஆட்சேபனையை சசிகலாவிடம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. தினகரனுக்கு பதவி கொடுத்து அவர் ஆட்டம் போட்டது போல, தேவையில்லாமல் விவேக்கையும் வளர்த்துவிட வேண்டாம் எனவும், தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி ஆட்சி தொடரட்டும் என திவாகரன் சசிகலாவுக்கு காட்டமாக தகவல் சொல்லி அனுப்பியதாக தகவல்கள் வருகின்றன.