1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (11:02 IST)

சர்வாதிகாரிபோல் செயல்படும் மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்: இளங்கோவன் பேச்சு

நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், அவருக்கு ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
 
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
 
அந்தகக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இது குறித்ததுப் பேசியதாவது:–
 
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு திரளான தொண்டர்கள் கூடியிருக்கிறீர்கள். இன்று கூடியிருக்கும் உங்களை பார்த்தால் எனக்கு உற்சாகம் பிறந்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சியில் எல்லா பதவியையும் பார்த்தவன் நான். இனிமேல் நான் பதவிக்கு வரவேண்டுமானால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி, பிரதமர் பதவி மட்டும்தான் பாக்கி. ஆனால் என் உயரம் எனக்குத் தெரியும்.
 
இன்று காங்கிரஸ் தலைமை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி வெளியில் சென்றுள்ளவர்கள் வருகிற 28 ஆம் தேதி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்க போகிறார்கள்.
 
மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது ஜெயலலிதா எதிர்ப்பு அலை இருந்தது. கருணாநிதி ஆதரவு தந்தார். ரஜினியும் ஆதரித்தார். அதனால் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பின்பு வந்த தேர்தல்களில் த.மா.கா. தோற்றது.
 
12 ஆண்டுகளாக பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, நான்கு மாதங்கள் ஆட்சி இல்லை என்றவுடன் ஓடுகிறீர்களே, நீங்கள் ஓடுகாலியை விட மோசம். பதவி சுகத்திற்காக ஓடுகிறீர்களே இது மிகப்பெரிய துரோகம்.
 
கட்சியில் தடையாக இருந்தவர்கள், நந்தியாக இருந்தவர்கள் சென்று விட்டனர். நீங்கள் போகவில்லை என்றால் நானும் தங்கபாலும், வசந்தகுமாரும் ஒரே மேடையில் உட்காருவோமா? காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த வாசனுக்கு நன்றி.
 
மோடி பொய் பிரசாரம் மூலம் ஆட்சிக்கு வந்து விட்டார். நாம் மவுன சாமியார்கள் போல் இருந்து விட்டோம். மோடியின் ஆட்சி பணக்காரர்களின் ஆட்சி. மோடி ஒரு மாயை. திடீரென்று வந்தார், திடீரென்று சென்று விடுவார்.
 
மோடி ஒரு சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார். ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை தான் மோடிக்கும் ஏற்படும்.
 
மக்கள் தற்போது காங்கிரசை நினைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் 2 இடங்களை வென்ற திமுக வும், 4 இடங்களில் வென்ற அதிமுக வும் ஆட்சியை பிடிக்கும் போது காங்கிரஸ் கட்சியால் ஏன் ஆட்சியை பிடிக்க முடியாது.
 
4 சதவீதம் 40 சதவீதமாக மாறும். நாம் அதற்கு ஒற்றுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய தொண்டர்கள் சூளுரைக்க வேண்டும். இவ்வாறு பேசினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.