வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (13:57 IST)

தீபா - கணவர் ஆதரவாளர்கள் இடையே மோதல் - தி. நகரில் பரபரப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரின் கணவர் மாதவன் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு அழைத்தனர். ஆனால் அரசியலின் ஆழம் புரியாத தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அரசியலில் குதித்தார். ஆனால் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதும் நிலமை தலைகீழாக மாறியது. தீபாவை ஆதரித்தவர்கள் மொத்தமாக ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகினர். 
 
தீபா பேரவை ஆரம்பிக்கும் முன்னரே அவரது கணவர் மாதவன் அவருக்கு பின்னால் இருந்து அவரை இயக்கிக்கொண்டு இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூடவே இருப்பார். இந்நிலையில் திடீரென தீபாவை சுற்றி தீய சக்திகள் இருக்கின்றன பேட்டியளித்த மாதவன் தனி கட்சி தொடங்க இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார். 
 
இதன் பின்னர் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வைரலாக பரவியது. ஆனால் தீபாவிடம் இருந்து மாதவன் பண மோசடி செய்ததாகவும் செய்திகள் உலாவின. இந்த சூழலில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்பு மனுவில் கணவர் மாதவனின் பெயரை குறிப்பிடாமல் தாக்கல் செய்தார் தீபா. 
 
ஆனால் தீபா பதற்றத்தில் குறிப்பிட மறந்துவிட்டார் என நொண்டி சாக்கு சொல்லி மனதை தேற்றிக்கொண்டார் மாதவன். தொடர்ந்து தீபாவின் மனதை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார் மாதவன். ஆனால் மாதவனின் எந்த சமாதான முயற்சியும் தீபாவிடம் எடுபடவில்லை. குறிப்பாக ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கு பின்னர் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் தீபாவிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட மாதவன் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் கூட சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை தி. நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு அவரின் ஆதரவாளர்கள் கூடினர். அப்போது தீபாவோடு அவரின் கணவர் மாதவனும் உடன் இருந்தார். அவர்கள் இருவரும் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டனர். 
 
அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தீபா மற்றும் மாதவன் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதனம் செய்து அங்கிருந்து அவர்களை கலைந்து போகக் கூறினார். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அதில் சிலர் தீபாவும், மாதவனும் இணைந்து செயல்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஒரு சிலர் தீபாவிற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். 
 
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.