1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2017 (09:49 IST)

ஜெயலலிதாவின் கைரேகை பெற்றதில் முறைகேடு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதாவின் கைரேகை பெற்றதில் முறைகேடு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராகி ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது குறித்து உரிய ஆவணங்களுடன் வரும் 24-ஆம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றிபெற்ற அதிமுகவின் சீனிவேல் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னரே உடல் நலக்குறைவால் காலமானார். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வந்தது.
 
தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேட்புமனுவுடன் படிவங்கள் ஏ மற்றும் பி-இல் வேட்பாளர் எந்தக் கட்சியை சார்ந்துள்ளாரோ, அக்கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையெழுத்திட வேண்டும்.
 
அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே அதற்கு பதிலாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை போஸுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. அந்த தேர்தலில் போஸ் வெற்றிபெற்றார்.
 
இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்தில் போஸின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது சரவணன் தரப்பில் போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
மேலும் சரவணன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் ஆஜராகி போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையிட அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட 22 ஆவணங்களுடன் சாட்சியம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இதற்கு அதிமுக தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் நீதிபதி சரவணனின் கோரிக்கையை ஏற்று வரும் 24-ஆம் தேதி தமிழ்நாடுத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த ஆவணத்தில் அப்பல்லோ விவகாரம் ஏதாவது வெளியாக வாய்ப்பு உள்ளதால் அதிமுக வட்டாரம் கலக்கத்தில் உள்ளது.