வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (17:53 IST)

சிறுவனின் ஆடையை கழற்ற சொல்லியதால் தகராறு; 6 பேருக்கு கத்தி குத்து

சிறுவனின் ஆடையை கழற்ற சொல்லியதால் இரு கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டதில் 6 பேரை கத்தியால் குத்திவிட்டு 3 இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
 

 
செங்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் அஜ்மல்கான் (22), ரியாஸ்கான் (19), நாசர்கான் (22) ஆகியோர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.
 
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (14) என்பவர் சென்றுள்ளார். அவரை பார்த்ததும் அஜ்மல்கான், ரியாஸ்கான், நாசர்கான் ஆகிய 3 பேரும், செல்போனில் படம் பிடிப்பதற்காக சிலம்பரசனின் ஆடைகளை கழற்றுச் சொல்லி இருக்கின்றனர்.
 
பிறகு சிலம்பரசன் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார் இதற்கிடையில், அஜ்மல்கான், ரியாஸ்கான், நாசர்கான் 3 பேரும் சிலம்பரசனின் உறவினர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி மிரட்டியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசனின் உறவினர்கள் 3 பேரும் இருந்த பிளாட்டுக்கு சென்று தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு கோஷ்டியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதில், ஆத்திரம் அடைந்த அஜ்மல்கான், ரியாஸ்கான், நாசர்கான் ஆகிய 3 பேரும் சேர்ந்து 6 பேரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 
கத்திக்குத்தில் காயம் அடைந்த 6 பேரும் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இதுகுறித்து செங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அஜ்மல்கான், ரியாஸ்கான், நாசர்கான் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.