1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (12:15 IST)

பட்டப் பகலில் கல்லூரி மாணவன் ஓட ஒட வெட்டிக் கொலை

சென்னையை அடுத்த ஆவடியில் கல்லூரி மாணவனை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட, ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை, வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கோபிநாத் (19), தினேஷ் (15), ராஜேஷ் (14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோபிநாத் அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
 
நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து நியூ ஆவடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் கோபிநாத்தை வழிமறித்தது.
 
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் கோபிநாத்தை வெட்ட துரத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற கோபிநாத் வீட்டை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்த அந்த கும்பல் கோபிநாத்தை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. அதில் நிலைதடுமாறிய கோபிநாத் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. 
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபிநாத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
 
இது தொடர்பாக வில்லிவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.