வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2017 (17:57 IST)

ஒருதலை காதல் பயங்கரம் - பிளேடால் கையை அறுத்துக்கொண்ட வாலிபர்; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

காதலிக்க வற்புறுத்தி கையால் அறுத்துக்கொண்ட வாலிபரின் தொந்தரவால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

திருப்பூரை அடுத்த பி.என். ரோடு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கீர்த்தனா (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தாகீர் (22) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர். இடையில் கீர்த்தனா பணம் கொடுத்தும் உதவியுள்ளார். இதனால், முகமது தாகீர் கல்லூரி மாணவி கீர்த்தனாவை காதலிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து முகமது தாகீர், கீர்த்தனாவிடம் தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் கீர்த்தனா தாகீரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து, தாகீர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்டுவதோடு எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தனா நேரில் அழைத்து நிலைமையை விளக்கியுள்ளார்.

அப்போது, மற்றொரு கையையும் அறுத்துக்கொண்டு தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார். மேலும், தன்னை காதலிக்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் உனது போட்டோவை போட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இது தவிர, தான் கீர்த்தனாவுடன் செல்போனில் பேசியபோது மற்ற மாணவர்கள் கேட்கும்படி கான்பரன்சிங் காலில் இணைத்துள்ளார். இந்த சம்பவம் கீர்த்தனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விஷயங்கள் வெளியில் பரவ ஆரம்பிக்கவும் மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

ஆனால் முகமது தாகீர் கீர்த்தனாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இருவரும் சந்தித்த காட்சிகளை திரித்து இணையத்தளங்களில் வெளியிட்டுவிடுதாகவும் மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த கீர்த்தனா குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் கீர்த்தனா எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது சாவுக்கு முகமது தாகீர் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

கீர்த்தனாவின் 2 கடிதங்களையும், டைரி ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் முகமது தாகீரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.