1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2017 (15:02 IST)

ஜெயலலிதாவுக்கே கிடைக்காத மரியாதை பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கிறது!

ஜெயலலிதாவுக்கே கிடைக்காத மரியாதை பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கிறது!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவே அவரை இரண்டுமுறை முதல்வராக அமர்த்தியதை அடுத்து மூன்றாவது முறையும் அவரது மறைவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வரானார்.


 
 
ஆனால் கட்சியிலும் ஆட்சியிலும் பன்னீசெல்வத்துக்கு முக்கியத்துவம் இல்லாதது போல் தோற்றம் உருவாகியது. சசிகலா தான் எல்லாமே. அவர் சொல்வதை தான் பன்னீர்செல்வம் செய்ய வேண்டும் என்ற பேச்சும் நிலவி வந்தது. இதன் உச்சக்கட்டமாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற அன்று மேடையிலேயே சசிகலாவின் காலில் விழுந்தார் தமிழக முதல்வராகிய பன்னீர்செல்வம்.
 
ஆனால் தற்போது பன்னீர்செல்வத்துக்கு மரியாதை அதிகரித்துள்ளது என பேசப்படுகிறது. வர்தா புயலின் தாக்கத்திலிருந்து சென்னையை மீட்டெடுக்க களத்தில் இறங்கி துரிதமாக செயல்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர டெல்லியிலேயே தங்கி இருந்து வெற்றியோடு தமிழகம் திரும்பியது, அதனை உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது என தொடர்ந்து நல்ல பெயரை எடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைக்காத மரியாதை கூட தற்போது பன்னீர்செல்வத்துக்கு கிடைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவர் சட்டசபைக்கு வரும் போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர். ஆனால், திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்பதில்லை.
 
ஆனால் நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வந்த போது, அதிமுகவினர் மட்டுமின்றி, திமுகவினரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்காத மரியாதையை திமுகவினர் பன்னீர்செல்வத்துக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.