வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (10:25 IST)

தமிழகத்தில் திடீர் வெப்பநிலைக் குறைவு – காரணம் என்ன ?

தமிழகத்தில் கடந்த வாரத்தில் சுட்டெரித்தது வெயில். ஆனால் கடந்த ஒருவாரமாக வெப்பநிலைக் குறைந்து குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.

மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரிக்க ஆரம்பித்தது. இன்னும் ஏப்ரல், மே எல்லாம் வந்தா வெயிலின் உக்கிரம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் மதிய வேலைகளில் வெளியில் வரவே அச்சப்பட்டனர்.

ஆனால் கடந்த ஒருவாரமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ந புவியரசன் விளக்கமளித்துள்ளார்.  அதில் ‘மார்ச் மாத தொடக்கத்தில் எதிர்பார்த்தப்படி தமிழகம் நோக்கி கிழக்கு திசைக் காற்று வீசவில்லை. மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வறண்ட காற்று தமிழகம் நோக்கி வீசியது. அதன் காரணமாக சுமார் 10 நகரங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவியது. இதனால் மார்ச் முதல்  வாரத்தில் வெயில் சுட்டெரித்தது.

ஆனால் அதன் பிறகு பகல்நேரத்தில் கிழக்கு திசைக் காற்று பலமாக வீசி வருகிறது. அதன் காரணமாக பல நகரங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது. அதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மாலத்தீவு முதல் குமரிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.