வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (14:42 IST)

நிலம் தருவதாக ஆசை காட்டிய ...தி.மு.க எம்.எல்.ஏ க்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

கரூர் அருகே  3 செண்ட் நிலங்களை கொடுப்பதாக கூறி ஆசை காட்டி வாக்குகளை கவர்ந்த செந்தில் பாலாஜிக்கு எதிர்ப்பு காட்டி ஆங்காங்கே 3 செண்ட் நிலம் எங்கே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தி.மு.க எம்.எல்.ஏ க்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும், பதவி வகித்து வரும் நிலையில், குறைந்த மாதங்கள் கூட இல்லை, அ.தி.மு.க வில் இருந்து அமமுக கட்சி வந்து பின்பு தற்போது தி.மு.க கட்சியில் இணைந்த உடனே, தி.மு.க மாவட்ட பொறுப்பாளராக உடனே பதவி கொடுத்தது தி.மு.க கட்சியினரிடையே பெரும் அதிர்ப்தி ஏற்படுத்திய நிலையில், உடனே வந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், செந்தில் பாலாஜிக்கே சீட்டு என்றதால் மேலும், அதிர்ப்திக்குள்ளாகினர்.
 
இந்நிலையில் அனைவருக்கும் 3 செண்ட் நிலம் இலவசம் என்று அறிவித்த செந்தில் பாலாஜி, மாநிலத்தில் இந்த 22 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தி.மு.க கட்சி ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என்ற நம்பிக்கையோடும் ஆங்காங்கே இலவசத்தினை தனது சொந்த நிதியில் செய்வதாக கூறி அள்ளிவிட்டார். 
 
ஆனால் மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியும், மாநிலத்தில் அதே எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க ஆட்சியும் பிடித்தது. உடனே, தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் லட்சியம், 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் என்றும் உறுதி அளித்தார். 
 
இந்நிலையில் வாக்குகள் சேகரிப்பிற்காக, மட்டுமே அரவக்குறிச்சி வந்த அவர், தி.மு.க வினரின் இல்லத்திருமணங்கள் மற்றும் விஷேசங்களுக்கு மட்டுமே சென்ற அவர், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூட தெரிவிக்க வில்லை என்ற கோபமும் ஒரு புறம், 3 செண்ட் நிலம் எங்கே என்ற கோபமும் ஒரு புறம் இருக்க, இன்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் தமிழக அரசு ஏற்கனவே தூர்வாரும் பணி திட்டத்தினை கையில் எடுத்த நிலையில், இன்று அதே பகுதியில் திமுக கட்சியின் இளைஞரணி சார்பில் ஏரி தூர்வாருவதாக கூறி தி.மு.க கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர்.
 
அப்போது வழிநெடுகிலும் செந்தில் பாலாஜி, மகேஷ் பொய்யாமொழி ஆகிய எம்.எல்.ஏ க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3 செண்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி, எங்கே 3 செண்ட் நிலம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முற்றுகையிட முயன்றனர், இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் அந்த பகுதியிலிருந்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பாதுகாப்புடன் வெளியேறினர்.