வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2015 (11:15 IST)

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
 
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னர்  அடுத்தடுத்து பல குழந்தைகள் இறந்தன. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அடுத்தடுத்து 4 குழந்தைகள் இறந்தன.
 
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஜனார்த்தனனின் பெண் குழந்தை, திருக்கோவிலூரை சேர்ந்த இளையராஜாவின் ஆண் குழந்தை, அதே ஊரைச் சேர்ந்த ராஜேசின் ஆண் குழந்தை, சங்கராபுரத்தை சேர்ந்த முனியனின் ஆண் குழந்தை ஆகியவை இறந்தன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூச்சு திணறல் ஏற்பட்டும், வேறு சில காரணங்களாலும் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இது குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் சம்பத் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைந்து வந்தார். குழந்தைகள் அடுத்தடுத்து இறப்புக்கு காரணம் குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் உஷா சதாசிவம் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 
இதைத் தொடர்ந்து, சென்னை மருத்துவ கல்லூரி பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர்கள் குமுதா, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அவர்கள் குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கும் ஆலோசனை வழங்கினர்.
 
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளவனூர் சாலையாம் பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் –ரம்யா தம்பதியரின் பிறந்து 17 நாளே ஆன ஆண் குழந்தை திடீரென இறந்து போனது.
 
அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விருத்தாசலம் அருகே ஒட்டில்மேடு கிராமத்தை சேர்ந்த சிவசக்தி முருகன் –விசாலாட்சி தம்பதியரின் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையும், சங்கராபுரம் அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பரத் – ரேவதி தம்பதியரின் பிறந்து 12 நாட்களே ஆன ஆண் குழந்தையும் இன்று அதிகாலை 4 மணியளவில் இறந்து போயின.
 
தொடரும் குழந்தைகள் இறப்பு சம்பவம் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.