வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:45 IST)

குழந்தையை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த தாய்

ஈரோடு அம்மாபேட்டை அருகே கணவனின் குடிப்பழக்கத்தால், மனைவி குழந்தையை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில்கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (25). 4 வயதில் ஸ்ரீதேவி, ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர். சத்யராஜுக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை சத்யராஜ் வீட்டிற்குள் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் போய்பார்த்தபோது, குழந்தையை கணவன் சத்யராஜ் அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து எரித்து விட்டு ஓடி விட்டார் என்று கதறி அழுத படி ஜோதிமணி கூறினார். இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் வந்து விசாரித்தனர். 
 
விசாரணையில், 2 நாளாக கணவன் வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை குழந்தை திவ்யதர்ஷினி பசியால் அழுதுள்ளது. ஆனால் பால் வாங்கித்தரக்கூட பணமின்றி ஜோதிமணி தவித்துள்ளார். இதனால், வெறுப்படைந்த அவர், அரிவாளின் கைப்பிடியால் குழந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது. பின்னர், வீட்டில் இருந்த பழைய துணிகளை குழந்தையின் உடல் மீது போட்டு மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளார். இதன்பிறகு, குழந்தையை கணவன் தான் கொன்றுவிட்டு ஓடிவிட்டார் என நாடகமாடியுள்ளார் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்தனர். சத்யராஜிடமும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.