1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (17:51 IST)

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் 2 ஆவது கணவர்: ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல்

வில்லிவாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிறுமி தாயின் 2 ஆவது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை அயனாவரம் தாளையம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ஆலன் கிருஸ்டிதாஸ்(வயது 40). இவர், சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், சென்னை வில்லிவாக்கம் நேரு நகரைச் சேர்ந்த சுமதி(26) என்பவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் வசித்து வந்தனர்.
 
அப்போது ஆலன் கிருஸ்டிதாஸ்–சுமதி இருவரும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமதியின் பெற்றோர், அவரை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது அவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
 
இதேபோல ஆலன்கிருஸ்டிதாசுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கும் 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
 
இதற்கிடையில் கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மகேஷ், கடந்த 2009 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுமதி, ஆலன் கிருஸ்டிதாஸ் பணி செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஆலன் கிருஸ்டிதாஸ் தனது முதல் திருமணத்தை மறைத்து சுமதியை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டார். மாதத்தில் 15 நாள் சுமதியுடனும், மீதம் 15 நாள் முதல் மனைவியுடனும் என ஆலன் கிருஸ்டிதாஸ் 2 வீட்டிலும் குடும்பம் நடத்தி வந்தார்.
 
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியின் மூத்த மகளான 8 வயது சிறுமி, தனது அடிவயிறு வலிப்பதாக தாயிடம் கூறி அழுதாள். உடனடியாக அவளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
 
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, இதுபற்றி தனது மகளிடம் கேட்டார். அதற்கு அவள், ஆலன் கிருஸ்டிதாஸ்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுபற்றி உன் தாயிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டியதால் பயந்து போய் சொல்லவில்லை என்றும் கூறினாள்.
 
இதுபற்றி ஆலன் கிருஸ்டிதாசிடம் சுமதி கேட்டார். அதற்கு அவர், ‘‘இதுபற்றி காவல்துறையில் புகார் செய்தால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்து உள்ளேன். அந்த வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு உன்னை கேவலப்படுத்தி விடுவேன்’’ என்று மிரட்டினார்.
 
ஆனால் அதையும் மீறி சுமதி, இதுபற்றி வில்லிவாக்கம் மகளிர் காவல்துறையில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் வில்லிவாக்கம் உதவி ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் மஞ்சுளா, சுமதியின் 8 வயது மகளிடம் விசாரணை நடத்தினார். அவள் நடந்த விவரங்களை கூறினாள்.
 
இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் காவல்துறையினர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஆலன் கிருஸ்டிதாசை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.