வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 1 ஜூன் 2016 (10:27 IST)

சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்ற வாலிபர்

நடிகர் சூர்யா தன்னை நடுரோட்டில் கன்னத்தில் அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த சென்னை வாலிபர் அந்த புகாரை திரும்ப பெற்றார்.

 


 
சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில்  முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று பிரேக்  போடவே அந்த கார் மீது பிரவீண்குமார் பைக் மோதியது.
 
இதில், தவறு யார் மீது என்று, அந்த காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர் சூர்யா தனது காரை விட்டு கீழே இறங்கி, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி,  தனது கன்னத்தில் அறைந்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரவிண்குமார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
ஆனால் அந்த இளைஞரை தாக்கவில்லை என்று நடிகர் சூர்யா தரப்பு பதிலளித்துள்ளது.
 
ஒரு வயதான பெண்மணியிடம் இரு வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்த நடிகர் சூர்யா, காரிலிருந்து இறங்கி அவர்களிடம் விசாரித்தார். அதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும், தனது உதவியாளர்களை அந்த பெண்மணிக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். சூர்யா அங்கு இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அந்த வாலிபர்கள் அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்கள். அதில் உண்மையில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சூர்யா மீது கொடுத்திருந்த புகாரை பிரவீண்குமார் திரும்ப பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பரபரப்பு அடங்கியுள்ளது.