1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (17:04 IST)

அதிமுக சார்பில் போட்டியிட மனு கொடுத்த உதவி கமிஷனர் : சென்னையில் பரபரப்பு

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, சென்னை உதவி கமிஷனர் ஒருவர் விருப்பு மனு அளித்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள், விருப்பு மனு அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, சென்னையை சேர்ந்த போலீஸ் கமிஷனர், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவதாக மனு அளித்து போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
 
சென்னை மதுவிலக்கு உதவி கமிஷனராக பதவி வகிப்பவர் பீர் முகமது. அவர் கடந்த 3ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து, திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக மனு அளித்தார்.
 
ஒரு போலீஸ்காரர் மனு கொடுத்ததை பார்த்த அதிமுக தொண்டர்களும், அங்கிருந்த காவலர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.
 
இதுபற்றி அவரிடம் கேட்ட போது “அதிமுக கட்சி உதயமானதில் இருந்தே எனது குடும்பம் அனைவரும் அந்த கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டு வருகிறோம். எனது அண்ணன் சுல்தான் அலாவுதீன், திருப்பூரில் அதிமுக பகுதி செயலாளராக பதவி வகித்தவர்.
 
நான் போலீசில் சேருவதற்கு முன்பே, அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்திருக்கிறேன். எனவே தற்போது தேர்தலில் போட்டியிட விரும்பி என் விருப்ப மனுவை அளித்திருக்கிறேன். எனக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.