வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:35 IST)

பெண்களிடம் தொடர் தங்க நகை பறிப்பு - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர், முசிறி, தா. பேட்டை போன்ற பகுதிகளில் நடந்து சென்ற பெண்களின் தாலி செயினை பறித்த 3 பேரை சமயபுரம் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 25 பவுன் தாலிச் செயினை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


 
 
திருச்சி மாவட்டம், சமயபும், மண்ணச்சநல்லூர், முசிறி, தாத்தையங்கார்பேட்டை ஆகிய பகுதிகளில் அண்மையில் தொடர் தாலி செயின் பறிப்பு மற்றும் வீட்டில் தூங்கும் பெண்களின் தாலிச் செயினை அறுத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த செயல்களை கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் நடராஜன் மேற்பார்வையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விஜயகுமார், நல்லேந்திரன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் சமயபுரம் ஈச்சம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த 3 பேரை சமயபுரம் காவல் ஆய்வாளர் ஞானவேலன் விசாரணை செய்ததில் முன்னுக்கும் பின் பேசியதால், அவர்களை காவல்நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை செய்ததில் 3 பேரும் முசிறி அட்லாப்பாட்டி, மேட்டுப்பட்டி பகுதியினைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவா (27), பிச்சை மகன் ராஜீவ்காந்தி (35), சிதம்பரம் மகன் லோகு என்ற முருகானந்தம் (24) ஆகியோர் எனத் தெரிய வந்தது. 
 
மேலும் சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, தா.பேட்டை ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக் தூங்கும் பெண்களின் தாலி செயின் ஆகியவற்றை அறுத்து விட்டு தப்பியோடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரிய வந்தது.
 
மேலும் அவர்கள் வழி பறியில் ஈடுபட்ட தாலி செயின் 25 பவுனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் சமயபுரம் காவல் ஆய்வாளர் ஞானவேலன் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்