வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (14:55 IST)

ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது - குஷ்பு

பாஜக ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதியாக இல்லை என்றும் ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
 
சென்னையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், அந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
 
அந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியதாவது:–
 
பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக இந்த 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்த திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது.
 
இதனை ரத்து செய்து ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க பார்க்கிறது. கிராமப்புற பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக இந்த வேலையில் ஈடுபட்டு குடும்ப செலவை கவனித்து கொண்டனர். ஆனால் அவர்களது வாழ்க்கையிலும் மோடி அரசு விளையாடுகிறது.
 
பாஜக ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதியாக இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது.
 
இந்த அரசு ஆட்சி செய்த 7 மாதத்தில் என்ன சாதித்தார்கள்? காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் மோடி அரசு செயல்படுத்துகிறது.
 
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது புதியது அல்ல. 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டு இருக்கிறார்.
 
காங்கிரஸ் அரசு 10 வருடங்களில் செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது. மக்கள் திட்டங்களை ரத்து செய்ய விடமாட்டோம். இதற்காக ஒன்று சேர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.