செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (08:06 IST)

வேலூர் பிரச்சாரத்திற்கு கேப்டன் வருவார்! பிரேமலதா கூறியதன் பின்னணி என்ன?

கடந்த மே மாதம் மக்களவை தேர்தல் நடந்தபோது வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 18ஆம் தேதி கடைசி நாள் என்றும், 19ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ளனர். இருதரப்பினர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் அவர்களை ஆதரித்து தேமுதிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
நேற்று உறவினர் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா, 'வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான அண்ணன் சண்முகம் அவர்களை வெற்றி பெற வைக்க கேப்டன் விஜயகாந்த், நான் எனது மகன் விஜய்பிரபாகரன், மற்றும் தேமுதிகவின் நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று பிரேமலதா கூறினார்
 
தொடர் தோல்வியால் தேமுதிக தொண்டர்கள் துவண்டுபோயிருக்கும் நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தவே கேப்டன் விஜயகாந்த் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும், அதனையடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியூட்ட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது