வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (21:39 IST)

தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தல் முடிவின்போது தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும், மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகள் உள்பட மொத்தம் 97 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. இன்றைய தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ‘இந்த முறை, மேற்கு வங்கமும் உத்தர பிரதேசமும் மத்திய அரசை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்த இரண்டு மாநிலங்களும் அடுத்த அரசை அமைக்கும் வல்லமை இருக்கும் என்றும் கூறினார். மேலும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களிலும், டெல்லி, பஞ்சாப், ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்காது என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறினார். மேலும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, பீகார், அசாம் மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை செய்து குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பிரதமரை தேர்வு செய்து புதிய ஆட்சியை அமைப்போம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.