வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2017 (19:19 IST)

அதிமுக பொதுக்குழுவிற்கு இடைக்காலத் தடை - நீதிமன்றம் அதிரடி

நாளை கூடவிருந்த அதிமுக பொதுக்குழுவிற்கு இடைக்காலத் தடை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.
 
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் நாளை சென்னை வானகரத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. முக்கியமாக, அந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்குவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட இருந்தது. 
 
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
அந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், நாளைக் கூடவிருந்த பொதுக்குழுவிற்கு இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், அக்டோபர் 13ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
 
இதன் மூலம், சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூடுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இதே விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் தீர்ப்பும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...