வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (15:43 IST)

காதலிக்க மறுத்த மாணவி: கத்தியால் கொடூரமாக குத்திய மாணவர்

சென்னை அம்பத்தூர் தனியார் என்ஜினீரிங் கல்லூரியில் காதலிக்க மறுத்த மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய மாணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பவர் காவியா (வயது 21). வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை சேர்ந்த இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.
 
இதே கல்லூரியில் படிக்கும் சிதம்பரத்தை சேர்ந்த மாணவர் சக்திவேல், காவியாவை காதலித்து வந்துள்ளார்.
 
ஆனால், படிப்பில் கவனம் செலுத்திய மாணவி காவியா, சக்திவேலுடன் பேசுவதை தவிர்க்க தொடங்கினார். இது சக்திவேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

கடந்த 1 மாதமாக காவியாவுடன் பேச முயற்சி மேற்கொண்டார். ஆனால், காவியா மாணவனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாணவர் சக்திவேல் இன்று கோபத்துடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
 
காலை 11 மணியளவில் வகுப்பறை வாசலில் காவியாவுடன் பேச முயற்சி செய்தார். ஆனால், காவியா பேச மறுத்து விலகிச் சென்றார். இதனால் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார்.
 
இதில் காவியாவின் மார்பு, கைகளில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய மாணவி அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.
 
உடனே சக மாணவிகள் ஓடி வந்து அவரை காப்பாற்றி அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
கத்தியால் குத்திய மாணவர் சக்திவேல் கல்லூரி வகுப்பறை வழியாக தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர்.
 
உடனடியாக அம்பத்தூர் காவல்துறையினரை வரவழைத்து சக்திவேலை ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தியதாக மாணவர் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. கத்திக்குத்து சம்பவத்தால் கல்லூரியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.