வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (01:42 IST)

மதுபோதையில் கார் விபத்து வழக்கில் அருண் விஜய் கைதாகி விடுதலை

மதுபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில் நடிகர் அருண் விஜய் காவல் துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து அவர் ஜாமீனில் விடுதலையானார்.


 

தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக விளங்குபவர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு தனது சொகுசு காரில் அவர் வீட்டிற்கு திரும்பினார். 
 
நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற அவர் சாலையில் நின்றிருந்த காவல் துறையினரின் வாகனத்தில் மோதியுள்ளார். காரில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 
 
காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 
 
அதன்பின் தனக்கு நெஞ்சுவலி என்று கூறிவிட்டு அங்கிருந்த சென்ற அருண் விஜய், போலீஸ் நிலையத்திற்கு திரும்பவே இல்லையாம். அவரின் தந்தை விஜயகுமார் மட்டும் வந்து காவல் துறையினரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த காவல் துறையினர், அருண் விஜய் காவல்நிலையத்திற்கு நேரில் வர வேண்டும். இல்லையெனில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அவர் ஓட்டிவந்த ஆடி காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இந்நிலையில் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சரண் அடைந்தார். விசாரணைக்குப் பின்னர் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
 
அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.