செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 30 மே 2015 (04:42 IST)

சென்னையில், காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

சென்னையில், காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை பாண்டிபஜார் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை, ஆலப்பாக்கம் ராஜீவ்காந்திநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரூபஸ்ரீ (21). இவர் சென்னை, தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபஸ்ரீ , அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்
 
அங்கு, சேலையூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்த ஹேமந்த்குமாருக்கும், ரூபஸ்ரீக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மனம் விட்டு அடிக்கடி பேசிக் கொண்டனர்.
 
இந்நிலையில், ரூபஸ்ரீயை காதலிப்பதாக  ஹேமந்த்குமார் கூறியுள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க ரூபஸ்ரீ  மறுத்துவிட்டார். ஆனாலும், விடாது கறுப்பு போல, ஹேமந்த்குமார், தொடர்ந்து ரூபஸ்ரீக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளரா்.
 
இதனால், வெறுத்துப் போன ரூபஸ்ரீ, தான் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு மாறிச் சென்றுவிட்டார். 
 
வழக்கம் போல் ரூபஸ்ரீ காலை நேரத்தில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, ஹேமந்த்குமார், ரூபஸ்ரீயை வழிமறித்து தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இதை ரூபஸ்ரீ சட்டை செய்யவில்லையாம். இதனால், ஆவேசம் அடைந்த ஹேமந்த்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரூபஸ்ரீ மீது சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
 
பலத்த காயமடைந்த ரூபஸ்ரீயை, அந்த பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
 
இது குறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் , ரூபஸ்ரீயை கத்தியால் குத்திய ஹேமந்த்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.