வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2015 (09:08 IST)

எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது: பட்ஜெட் குறித்து ஜெயலலிதா கருத்து

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த, மத்திய பட்ஜெட்டில் பல வகையான அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
2015-2016 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார உத்திகளை முற்றிலும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
 
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் தனது இலக்கினை முடிவு செய்து துணிச்சலான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொருளாதாரத்தை மாற்றி அமைத்துள்ளார்.
 
சர்வதேச அளவில் சாதகமான நிலைமைகள் ஏற்பட்டாலும், பெட்ரோலிய விலை வீழ்ச்சியால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் பயன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை என்பதை, மத்திய அரசின் பல்வேறு வரிவிதிப்புகள் காட்டுகின்றன.
 
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான இலக்கில், மாநிலங்களுக்கு பெரும் பங்கு வழங்கும் "கூட்டாட்சியில் ஒத்துழைப்பு" போன்றவை குறித்து பெருமளவில் பேசப்பட்டு வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகள் இதனை பொய்யாக்கும் வகையில் இருக்கின்றன.
 
14 ஆவது நிதிக்குழு கமிஷன் 32 லிருந்து 42 சதவீதமாக பங்குகளை அதிகரித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு பல வகைகளில் பறித்துக்கொள்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது விதிக்கப்பட்ட லிட்டருக்கு 4 ரூபாய் என்ற வரியின் வருமானம் மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
 
முந்தைய பட்ஜெட்டில் பொது செலவினங்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 லட்சத்து 75 ஆயிரத்து 532 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிதியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று கொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக 3 இடங்களில் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாம் கடிதம் எழுதியதையும் நினைவு கூற விரும்புகிறேன். அதே நேரத்தில் உலக பாரம்பரிய கலாசார சின்னத்திற்கான உதவியை பெறுவதற்கு தமிழ்நாட்டில் எந்த ஒரு பாரம்பரிய கலாசார சின்னமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
 
தமிழ்நாட்டில் மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் திட்டத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது. அதேசமயம், மத்திய நிதியமைச்சர் முயற்சிப்பதைப் போன்று, அனைத்து சமூகப்பாதுகாப்புத் திட்டங்களையும், நிதித்துறையின் இத்தகைய நடவடிக்கை மூலமே செயல்படுத்துவது என்பது ஏற்கத்தக்கதாக இருக்காது.
 
ஏனென்றால், ஏழை-எளிய மக்கள் இந்த மாற்றுத் திட்டத்திற்காக செலவிடும் தொகை இப்போதும் கூட அதிகமாகவே உள்ளது. இந்தக்குறை நீக்கப்படவேண்டும். மத்திய அரசு வழங்கும் மானியங்கள், தவறாகப்பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக, இத்திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை இந்த பட்ஜெட் முன்வைக்கும் அதேநேரத்தில், ஏழை, எளிய மக்கள் பெறக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள், எந்தவகையிலும் குறைக்கப்பட்டுவிடக்கூடாது.
 
மானிய உதவிகளை பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அதே நேரத்தில், இத்தகைய நடைமுறை உரம் மற்றும் உணவு பொருட்கள் மீது கண்மூடித்தனமாக செயல்படுத்தப்பட்டு விடக்கூடாது. அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தாலும், அவை செயல்படுத்தப்படும் விவரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
 
சுய உதவிக்குழுக்கள் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்புகளுக்கு மட்டுமின்றி, சிறுகுறு நிறுவனங்களுக்கு நிதி அளிக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். அதைப்போல் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.
 
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை, தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு போன்ற வணிக வழித்தட தொழில் முனையங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.
 
அனைத்துவகை கொள்முதலில், வெளிப்படையான நடவடிக்கையை உறுதிப்படுத்தி தமிழகம் முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தது. தற்போது மத்திய அரசும் இது போன்ற சட்டம் தேவை என்பதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெருநிறுவனங்கள் தொழில் தொடங்க, துரிதமாக அனுமதி அளிக்க வகை செய்யும் புதிய சட்டத்தைப் பொறுத்தவரை, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகளை மீறாத வகையில், மாநிலங்களிடமும் முழுமையாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.
 
தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில், படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் திட்டங்களைச் சேர்ப்பதன் மூலமும், கச்சா பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமும், வரிவிதிப்பின் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நீண்ட காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. தமிழ்நாட்டில், மின்னணு வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த இந்த சீர்திருத்த நடவடிக்கையை தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
 
பசுமை மின்னாற்றல் நிதிக்காக, நிலக்கரி டன் ஒன்றுக்கு விதிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் வரி, 200 ரூபாயாக உயர்த்துவது, ரயில்வே பட்ஜெட்டில் நிலக்கரி சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வரி உயர்வும் சேர்ந்திருப்பது மாநில மின்சார உற்பத்தி நிலையங்களை கடுமையாக பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக, மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர வழிவகுக்கும்.
 
கறுப்புப்பணம் உருவாகும் வழிமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டில் பணப்பரிவர்த்தனை மூலமான வர்த்தக நடவடிக்கைகளைக்குறைத்ததுடன், தேசத்திற்கு சொந்தமான பணம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்படாமல் தடுக்க, மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள், வரவேற்கத்தக்கது. அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்வதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிதிச்சந்தையில் முதலீடு செய்வதை அதிகரித்து நேரடி முதலீட்டைக் குறைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
 
இதனால், தொழில்துறையில் நேரடி அன்னிய முதலீட்டின் மூலம் கிடைக்கும் நீண்டகால பலன் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றமும் கடுமையாக பாதிக்கப்படும். மொத்தத்தில் பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.