வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (10:32 IST)

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: நீளும் பட்டியல் – மேலும் 4 மாணவர்கள் கைது!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவர்கள் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ பட்டப் படிப்புக்கான “நீட்” தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து முறைகேட்டுக்கு உதவிபுரிந்த கேரளா இடைத்தரகர் ஒருவரும் பிடிபட்டார். அவரை விசாரித்ததில் மேலும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

உதித் சூர்யா போலவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்களும், ஒரு மாணவியும் மோசடி செய்துள்ளனர். அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் மாணவர்கள் தங்கள் தந்தையார்தான் இதை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

தற்போது சிக்கிய மூன்று பேரும் உதித் சூர்யாவின் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் 4 பேரின் குடும்பங்களும் திட்டமிட்டே இதை செய்திருப்பதாக போலீஸார் கணிக்கின்றனர். இதுகுறித்து தெரிவித்த போலீஸார் ”இது இந்த நான்கு பேரோடு மட்டும் நின்றுவிடவில்லை, தேசிய அளவில் நிறைய பேர் இதுப்போன்ற மோசடிகளில் ஈடுப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.  ஆள்மாறாட்டம் தவிர விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுப்பட்ட ஆசிரியர்களும் கையூட்டு பெற்று மோசடியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இந்த நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மருத்துவ கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளன.