வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (07:10 IST)

கஜா புயல் எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் தமிழகத்தில் உள்ள கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது இந்த புயல் சென்னைக்கு 380 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அது 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயல் நெருங்குவதை அடுத்து கடலூர், பாம்பனில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் நேற்று முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காற்று வேகமாக வீசினால் மின்கம்பங்கள் சாய வாய்ப்பு இருப்பதால் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள் என்றும், ககந்தீப்சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் எதிரொலியாக காரைக்குடி அழகப்பா பல்கலை., பாரதிதாசன் பல்கலை., திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.