வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (19:01 IST)

அண்ணாவுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு ரசிகர்கள் செய்த அலப்பரை

ஈரோடு தந்த செம்மல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் குருகுலத்தில் அரசியல் படம் கற்றுப் பின்னர் தமிழக அரசியலையே தன்னுடைய தனித்தன்மையான அறிவால் நிர்ணயித்தவர், சாதாரணக்குடியானவன் கூட திராவிட அரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போட்டவர்தான் அண்ணா

பெரியார் காட்டிய வழி என்றாலும் இதில், தன் ஆளுமையையும் தன்னிகரில்லாத உழைப்பையும் அறிவையும் தந்து இந்தியாவிலேயே மாநில சுயாட்சிக்கொள்கைக்கும், ஹிந்தி மொழி எதிர்ப்புக்கும், திராவிட நாடு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்தியாவையே தென்பக்கமாய் திரும்பி பார்க்க வைத்தவர் அண்ணா. அவர் பேரறிஞர் அண்ணா.
 
ஒவ்வொரு அரசியல் பொதுக்கூட்டத்தின் போதும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தன் தம்பிமார்களை பேசச் சொல்லிவிட்டு இறுதியாகப் பேசுவார் அண்ணார். வெண்கலக் கிண்ணத்துக்குள் சப்தஸ்வர மணிகளை ஜதி சொல்லி நடமாட விட்டது மாதிரி அண்ணாவின் வெண்கலக் குரலில் இருந்து கத்தை கத்தையாக தமிழ் வார்த்தைகள் அட்சரப்பிசுகின்றி  நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இசைநயம் ஆர்பரிக்க எதுகை மோனை சந்தம் கொஞ்சி ஏற்ற இறக்க பாவனையுடன் வரிசைகட்டி வந்து கேட்கின்ற மக்களை அறிவார்த்தமாய்ச் சொக்கவைக்குமாம்.இதில் தம்பிமார்களைவிட ஒரு படியாவதும் அதிகமாய்ப் பேசிவிடுவாராம்.
 
அக்காலத்திலேயே கூலித் தொழிலாளி கூட காசு கொடுத்து அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்கென்றே மாட்டுவண்டியில் ஆள்சேர்த்துக்கொண்டு போவார்களாம். ஒருமுறை அண்ணா அமெரிக்காவில் உள்ள ஹோட்டலில் பேசும் போது எந்தக் குறிப்பும் இல்லாமல் பேசி ஆங்கிலேயர்களையே திக்குமுக்காட வைத்தாராம்.
 
அண்ணாவிம் இறுதியஞ்சலிக்கு  ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு நன்றிக்கடன் தெரிவிப்பதற்காக சென்னையில் ஒன்றறைக் கோடிப்பேர் கூடி நின்றது உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு. இதைப் பெரியாரே கூறியிருக்கிறார்.
 
அத்தனை ஆற்றல் கொண்டவரை இன்று நடிகர் விஜய்யுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டி அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  அந்த போஸ்டரில் அந்த அண்ணா அரசியலை பார்த்ததில்லை…இந்த அண்ணா அரசியலை பார்க்க காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.