வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (16:53 IST)

அனிதாவின் தற்கொலை யோசிக்கக்கூடிய விஷயமாக உள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அனிதாவின் தற்கொலை யோசிக்கக்கூடிய விஷயமாக உள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மாணவி அனிதாவின் மரணம் மிகப்பெரிய மனவருத்தம் அளிக்கிறது. நன்றாக படிக்கக்கூடிய மாணவியாகிய அவரின் இழப்பு மிகப்பெரிய நஷ்டமாக உள்ளது என கூறிய புதிதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


 
 
மாணவி அனிதா மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பலன் கிடைக்காமல் போனது. இதனால் அனிதாவின் கனவு, லட்சியமான மருத்துவராகும் வாய்ப்பு தகர்ந்து போனது.
 
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கண்ணீரை மாணவி அனிதாவுக்காக சிந்தினர். அனைவரும் இறந்து போன மாணவி அனிதாவை தங்கள் வீட்டு பிள்ளைகளாகவே பார்த்து அழுதனர்.
 
மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் பலரும் மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டினர். நீட் விலக்கு பெற்று தரப்படும் என உறுதியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் மாணவி அனிதாவின் மரணம் குறித்தும் நீட் தேர்வு குறித்தும் பேட்டியளித்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அனிதாவின் மரணம் மனவருத்தத்தை அளிக்கிறது. நன்கு படிக்கக்கூடிய மாணவியின் இழப்பு மிகப்பெரிய நஷ்டமாக உள்ளது. மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஒத்துழைப்பு அளித்தது மாநில அரசுக்கு தெரியும்.
 
நீட் தேர்வுக்கு ஒரு வருடம் கால அவகாசம் சென்ற வருடமே கொடுத்திருந்தோம். அந்த சர்ச்சையில் ஈடுபட நான் விரும்பவில்லை. மாணவி அனிதாவின் தற்கொலை யோசிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் என்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்தேன். இதற்கு மேல் நான் இதைப் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.