1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 8 மார்ச் 2017 (04:48 IST)

முன்னாள் திமுக அமைச்சரை கொலை செய்ய முயற்சி. சோடா பாட்டில் வீச்சால் பரபரப்பு

திமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி அவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் மர்ம நபர்கள் கல், மற்றும் சோடா பாட்டில் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது





தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் 'இளைஞர் எழுச்சிநாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விழுப்புரத்தில் நடந்த எழுச்சி நாள் கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் துரை முருகன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோர்களூம் கலந்து கொண்டனர்.

எழுச்சி நாள் விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் கல் மற்றும் சோடா பாட்டிலை மேடையை நோக்கி வீசினார். பொன்முடியை நோக்கி வீசப்பட்ட கல் குறிதவறி அருகில் இருந்த இன்னொரு திமுக நிர்வாகி மீது விழுந்ததால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டதோடு பற்கள் உடைந்தது.

மர்ம நபரின் கல், சோடா பாட்டில் வீச்சால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் உடனடியாக சுதாரித்த் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.