வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (15:59 IST)

அப்பல்லோவில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த அமித் ஷா: பின்னணி என்ன?

அப்பல்லோவில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த அமித் ஷா: பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலன் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விசாரித்து செல்கின்றனர்.


 
 
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் அமைச்சர், கேரளா முதல்வர், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலரும் அப்பல்லோ வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர்.
 
இதனையடுத்து பிரதமர் மோடி இன்னமும் ஏன் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது. ஏற்கனவே மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்பல்லோ வந்து முதல்வரின் உடல் நிலைகுறித்து விசாரித்து சென்றுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இன்று அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றுள்ளனர்.
 
இன்று மதியம் 2.15 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை வந்த அவர்கள் அங்கு அதிமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. அதன்பின் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.
 
பொதுவாக அனைத்து தலைவர்களும் அப்பல்லோ வந்து முதல்வரின் உடல்நிலைகுறித்து மருத்துவர்களிடம் பேசி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் அமித் ஷாவும், அருண் ஜெட்லியும் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றதற்கு காவிரி விவகாரம் தான் காரணம் என கூறப்படுகிறது.
 
காவிரி மேலண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது எனவும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த உத்தரவை வழங்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறி கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்பட்டது.
 
இதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகவே அமித் ஷாவும், அருண் ஜெட்லியும் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளதாக பேசப்படுகிறது.