வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (13:16 IST)

ம.ந.கூட்டணியில் பிளவு; திமுகவுடன் கூட்டணி? - என்ன சொல்கிறார் திருமாவளவன்

கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் - திமுக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
 

 
இந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
 
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”உள்ளாட்சித் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள் நலக்கூட்டணி கட்சிகளோடு இணைந்தே தேர்தலை சந்திக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
பெரும்பாலான மாவட்டங்களில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை.
 
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - திமுக கூட்டணி என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- திமுக கூட்டணி என்றும் தற்போது கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் - திமுக கூட்டணி என்றும்செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இவை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மக்கள் நலக்கூட்டணியுடன் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.