1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (21:40 IST)

பேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் ஸ்டாலினுடையது தானா? - ஜெயலலிதா கேள்வி

மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிடும் கருத்துகள் அவருடையதுதானா என்பதை, அவர் விளக்கிட வேண்டியது அவசியம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தின் போது பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், ”சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் தங்களது பேச்சுகள் மூலமாகவும், சிலர் அறிக்கைகள் மூலமாகவும், சிலர் முகநூல் பதிவுகள் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
 
திமுக சட்டமன்றக் குழு தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள் தானா என்பதை, அவர் விளக்கிட வேண்டியது அவசியமாகும்.
 
ஏனெனில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 
ஆனால், திமுகவின் தலைமைக் கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலினின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் தெரிவித்து ஒரு விளக்கத்தை அளித்தது.
 
இதனால், சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் முகநூலில் வெளி வந்த பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துகள் தானோ என்னவோ? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.