வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (15:13 IST)

பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைத்த அதிமுக-திமுக - பிருந்தா காரத் குற்றச்சாட்டு

பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைத்த அதிமுக-திமுக - பிருந்தா காரத் குற்றச்சாட்டு

தந்தை பெரியார் வழி வந்தவர்கள் என்றும் பெரியாரின் படத்தை பயன்படுத்தும் இவர்கள் இளவரசன் பிரச்சனையில் பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர் என்று பிருந்தா காரத் குற்றம் சாட்டி உள்ளார்.


 
தருமபுரியில் நடைபெற்ற சிறப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிருந்தா காரத், “காதல் திருமணம் செய்யும் பெண்களை சாதி ஆணவத்துடன் கொலை செய்கின்றனர். ஆனால், இந்த வன்முறை குறித்து அரசு வழக்குப் பதிவு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது” என்றார்.
 
சாதி ஆணவக் கொலைகள் இந்தியாவில் தான் அதிகம் நடக்கிறது. சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் காதல் என்ற வார்த்தை குற்றமாக பார்க்கப்படுகிறது. இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆண்,பெண் இருவருக்கும் உள்ளது. எந்த சாதியில் இருந்தும் எந்த மதத்திலிருந்தும் இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
 
உயர் சாதிப் பெண்ணை காதல் திருமணம் செய்யும் போது ஆண் குடும்பத்தின் மீதும் அவரது சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
தருமபுரியில் திவ்யா-இளவரசன் விவகாரத்தில் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். சாதி ஆதிக்க சக்திகளால் இளவரசன் குடும்பம் தாக்குதலுக்குள்ளானது. அவர்கள் செய்த குற்றம் என்ன? திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலைக்கு தூண்டியவர்கள் சாதி ஆதிக்க சக்தியினர்தான்.
 
இதற்கு காரணமானவர்களை ஆளும் அதிமுக அரசு தண்டிக்கவில்லை. சட்டப்படி எந்த நடவடிக்கையும் இல்லை. திமுகவும் வாய்திறக்கவில்லை. இரண்டு கட்சிகளும் சாதி ஆதிக்க வன்முறையாளர்களுக்கு ஆதரவாக உள்ளன. தந்தை பெரியார் வழி வந்தவர்கள் என்றும் பெரியாரின் படத்தை பயன்படுத்தும் இவர்கள் இளவரசன் பிரச்சனையில் பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர்” எனவும் குற்றம் சாட்டினார்.