வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (09:43 IST)

கள்ளத் தொடர்பை கண்டித்ததால் காதலன் மூலம் கணவரை கொலை செய்தேன்: மனைவி பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளத் தொடர்பை கண்டித்ததால் தனது கணவரை காதலன் மூலம் கொலை செய்தேன் என்று மனைவி பரபரப்பான வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
 
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். அவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றினார். இவரது மனைவி விமலா. இவருக்கு வயது 28. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள பைபாஸ் சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகானந்தம் பிணமாகக் கிடந்தார்.
 
இந்த கொலை வழக்கு தொடர்பாக விமலா உள்பட 11 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விமலா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விமலாவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, விமலா வாக்குமூலம் கொடுத்தார்.
 
அந்த வாக்குமூலத்தில் விமலா கூறியிருப்பதாவது:–
 
முருகானந்தம் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து எனக்கு டார்ச்சர் கொடுத்தார். மேலும் இது குறித்து எனது கள்ளக்காதலனான சுப்பிரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்த மாயவன் (29) என்பவரிடம் தெரிவித்தேன்.
 
எங்களது கள்ளத்தொடர்பை கண்டித்ததுடன் அதற்கு இடையூறாக இருந்ததால் அவர் தனது கூட்டாளியான நவீன் ராஜூவுடன் சேர்ந்து முருகானந்தத்தை கொலை செய்ததாக கூறினார். இதற்கிடையே நேற்று மாயவன் மாத்தூர் வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார்.
 
அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது விமலாவும், நானும் சிறுவயது முதலே காதலித்தோம். அவரது விருப்பம் இல்லாமல் முருகானந்தத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் விமலாவுக்கும், முருகானந்தத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
 
இந்நிலையில்தான், குடிபோதையில் தொந்தரவு செய்வதால் முருகானந்தத்தை தீர்த்து கட்டி விடும்படி விமலா என்னிடம் கூறினார். இதையடுத்து நான் வெளிநாட்டுக்குச் செல்வதால் பார்ட்டி வைப்பதாகக் கூறி கடந்த 17 ஆம் தேதி குண்டூருக்கு மோட்டார் சைக்கிளில் முருகானந்தத்தை அழைத்து சென்றேன்.
 
அப்போது என்னுடன் நவீன்ராஜூம் வந்தார். பின்னர் குண்டூர் பகுதியில் வைத்து மது அருந்தினோம் போதை தலைக்கேறியதும் கழுத்தை அறுத்து கொலை செய்து மாத்தூர் மின் வாரிய அலுவலகம் அருகே வீசினோம்" இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறினர்.
 
இதைத் தொடர்ந்து, மாயவன் புதுக்கோட்டை சிறையிலும், விமலா திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நவீன்ராஜையும் காவல்துறையினர் கைது செய்தனர்.