1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:17 IST)

ராம்குமாரின் உயிரை பறிக்குமா 220 வாட்ஸ் மின்சாரம்? : நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள்

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  
 
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு,  தங்கள் சார்பில் ஒரு தனியார்  மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 
 
அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற துவங்கி விட்டது.  அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ராம்குமார் சார்பாக சங்கர சுப்பு என்ற வழக்கறிஞர் வாதாடுகையில் “ராம்குமாரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ராம்குமார் தனது வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மின்கம்பியில் 220 வாட்ஸ் மின்சாரம்தான் உள்ளது. அந்த குறைந்த மின்சாரம் ஒருவரின் உயிரை போக்காது. சிறை அதிகாரிகள் அவரை அடித்துக் கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், தன்னை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக ராம்குமார் தனது தந்தையிடம் ஏற்கனவே கூறியிருந்தார். 
 
எங்களை பொறுத்தவரை உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். அது தவிர வேறெந்த நோக்கமும் இல்லை” என்று வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.