வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (06:10 IST)

சேலம் சிறையில் அதிமுக நிர்வாகி மரணம்: வழக்கை விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் சிறையில் அதிமுக நிர்வாகி மரணமடைந்த வழக்கை 8 வாரத்துக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று காவல் துறைக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அதிமுகவை சேர்ந்த பலர் கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அதிமுக நிர்வாகி சுகுமார் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வகணபதி, தனபால், வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் தடுத்துள்ளனர். 
 
இதனால், குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால், சுகுமார் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் சந்தேகச் சாவு என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
சுகுமார் இறந்தது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் பதிவு செய்த மர்மச்சாவு என்ற வழக்கை சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் விசாரித்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
ஆனால், 16 மாதங்களாகியும் இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணனை நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார். 
 
மேலும் சிறையில் சுகுமார் இறந்தது தொடர்பான வழக்கை உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், 8 வாரத்துக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.