வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2017 (18:57 IST)

டி.டி.வி.தினகரனுக்கு கிளம்பியது எதிர்ப்பு: கட்சி பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்!

டி.டி.வி.தினகரனுக்கு கிளம்பியது எதிர்ப்பு: கட்சி பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்!

அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இன்று நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.


 
 
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் துரோகிகள் என ஜெயலலிதாவால் முத்திரை குத்தப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி.தினகரன். ஜெயலலிதா இறக்கும் வரை அவரை கட்சியில் சேர்க்கவே இல்லை. ஆனால் இன்று அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா.
 
டிடிவி.தினகரனுக்கு புதிதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் என்ற பதவியையும் உருவாக்கி வழங்கியுள்ளார் சசிகலா. சசிகலா சிறைக்கு செல்ல இருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். டி.டி.வி.தினகரன் சசிகலாவின் அக்கா மகன் ஆவார். இது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார் அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன்.
 
மேலும் வர்தா புயல், குடிநீர் பிரச்சினை போன்றவற்றை சிறப்பாக கையாண்ட முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கருப்பசாமி பாண்டியன். பன்னீர்செல்வம் தரப்பிடம் இருந்து அழைப்பு வந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும், ஆதரவாளர்களுடன் கலந்துபேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் கருப்பசாமி பாண்டியன்.