வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (18:41 IST)

ஊட்டி.. பெங்களூர்.. கோவா.. பேருந்தில் பறக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்..

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை பேருந்தில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அழைத்து சென்று ஓரிரு நாட்கள் தங்க வைக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது நாட்டையே உலுக்கியது. 
 
இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது.  
 
ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தங்களுக்கே இருப்பதாக சசிகலா தரப்பு கூறியுள்ளது. இதுவரை ஒரிரு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே, ஓ.பி.எஸ் பக்கம் சென்றுள்ளதாக தெரிகிறது. இன்னும் சிலர் வருவார்களா.. மாட்டார்களா என்பது தெரியாமல் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. 
 
மேலும், இன்று காலை நடந்து முடிந்த எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின்பு அவர்கள், பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், நாளை அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால், கவர்னர் சென்னை திரும்பும் சூழ்நிலை இல்லாத காரணத்தினால், அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் இருந்தால், அது பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால், எப்படியாவது அவர்களை அழைத்து சென்று வேறு மாநிலங்களை வைத்திருக்க சசிகலா தரப்பு முடிவெடுத்துள்ளனர்.
 
அதன் பின், ஆளுநர் சென்னை திரும்பிய பிறகு, அவர்களை திரும்ப அழைத்து வந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு  உரிமை கோரும் முடிவில் சசிகலா இருப்பதாக தெரிகிறது. 
 
எனவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் மொத்தம் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, ஒரு பேருந்து ஊட்டிக்கும், ஒரு பேருந்து கோவாவிற்கும், ஒரு பேருந்து பெங்களூருக்கும் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதற்கு பின்னால் சசிகலாவின் தம்பி திவாகரனும், சசிகலாவின் கணவர் நடராஜனும் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.