செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (07:44 IST)

நடிகை சசிரேகா கொலை வழக்கு: கணவர், கள்ளக்காதலியிடம் தீவிர விசாரணை

நடிகை சசிரேகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


 

 
போரூர் மவுண்ட் சாலை, டிஎல்எப் அருகே, ராயலா நகர் பகுதியில் கடந்த மாதம் 5 ஆம் தேதி குப்பைத்தொட்டிகளுக்கு அருகில் தலை இல்லாத பெண்ணின் உடல் மட்டும் கிடந்தது. 
 
இது குறித்து ராயலா நகர் காவல்துறையினர் விசாரணை  நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் ஒரு மாதத்திற்கு பிறகு கொலை செய்யப்பட்டது சினிமா நடிகை சசிரேகா என்பது தெரியவந்தது. 
 
இதைத் தொடர்ந்து, சசிரேகாவை கொலை செய்தது கணவர் ரமேஷ் சங்கர் மற்றும் அவரது கள்ளக்காதலி லக்கியா என்பதும் தெரியவந்தது.
 
இவர்கள் இருவரும் சசிரேகாவை கொலை செய்து தலையை வெட்டி, பின்னர், உடலை குப்பைத்தொட்டி அருகிலும், தலையை கொளப்பாக்கம் அருகே உள்ள கால்வாயிலும் வீசிச்சென்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரமேஷ்சங்கர் படம் எடுப்பதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார்.
 
அந்த பணத்தை திருப்பிக்கேட்டவர்களை துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
 
இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்பேரில் ரமேஷ்சங்கர் மற்றும் லக்கியா ஆகிய 2 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
 
இந்நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையின் முடிவில், சசிரேகா கொலை மற்றும் பண மோசடி குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.