வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (11:17 IST)

சென்னையில் பணம் கேட்டு கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட நடிகை மீட்பு

சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நடிகை நிஷா மீட்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கேபிள் டி.வி. அதிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா. இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்.
 
இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடிகை நிஷா, தனது தாயாருடன் சென்னை தியாகராயநகர் வந்தார்.
 
அப்போது சொகுசு கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள், நிஷாவை கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாவின் தாயார் ஜானகி தனது மகள் கடத்தப்பட்டது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 
இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறயினர் இது குறித்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் நடிகை நிஷாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாமலிருக்க ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.
 
இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு நடிகையை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. 
 
அதன்படி, கடத்தப்பட்ட நடிகையின் செல்போன் நம்பர் மூலம், அவர் கடத்தி செல்லப்பட்ட இடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
நிஷாவை கடத்தியவர்கள் அவரை கோயம்புத்தூர் உள்ளிட்டபட பல இடங்களுக்கு கடத்திச் சென்று அவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், நிஷாவை விடுதலை செய்ய 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.
 
பின்னர், நடிகை நிஷாவை சில தினங்களுக்கு முன்னர் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.
 
இதைத் தொடரந்து, ரூ.10 லட்சம் பணம் தருவதாக நடிகை நிஷா ஒப்புக்கொண்டதன் பேரில் அவரை கடத்தல்காரர்கள் சென்னைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இதையறிந்த தனிப்படை காவல்துறையினர் கடத்தல்காரர்கள் 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நடிகை நிஷாவையும் பத்திரமாக மீட்டனர்.
 
கைதானவர்களில் ஒருசர் போரூரைச் சேர்ந்த பஷீர். கைதான ராம்குமார் மற்றும் மணி ஆகிய இருவரும் பஷீரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
 
இந்த கடத்தல் சமபவத்தில் தொடர்புடைய பஷீர் போரூர் பகுதியில் கேபிள் டி.வி. தொழில் செய்து வருபவர்.
 
இவர், தொழில் ரீதியாக கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் செல்லும் இடங்களில் வசிக்கும் அழகான பெண்களுக்கு காதல் வலை வீசி, திருமணமும் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுபோல் 2 பெண்களுக்கு காதல் வலை வீசி திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் குழந்தை உள்ளது. நடிகை நிஷாவையும் இதுபோல் காதலித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளார்.
 
இந்நிலையில், பஷீர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்த தகவலை அறிந்து நிஷா, பஷீரை விட்டு பிரிந்து வந்து விட்டார்.
 
இதைத் தொடர்ந்து, அவரை கடத்திச் சென்று பணம் பரிக்க பஷீர் முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பஷீர் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
நடிகை கடத்தப்பட்ட சம்பவம் தெரியவந்ததும் போரூர் மற்றும் மதானந்தபுரம் ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.