வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (16:13 IST)

இனிமேல் பொறுக்க முடியாது - டிவிட்டரில் பொங்கிய சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற இளைஞர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதற்கு, நடிகர் சிம்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது. 
 
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடப்பதை உறுதி செய்வோம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.  2 நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர். அதேபோல், மதுரையில் இன்று ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி பிரம்மாண்டமான பேரணியை நடத்தினர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
 
அப்போது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து முன்னேறவே, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கேள்விப்பட்டு என் இதயத்தில் இருந்து ரத்தம் கசிகிறது.  ஒரு சக தமிழ் சகோதரனாக உங்களுடன் நான் இருக்கிறேன். இனிமேல் அமைதி காக்க முடியாது.  
 
அவர்களின் நிறத்தை அவர்கள் காட்டிவிட்டார்கள். இப்போது நாம் தமிழனின் நிறத்தையும், ஒற்றுமையையும் அவர்களுக்கு காட்டுவோம். நாங்கள் என்ன செய்வோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.. விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு செல்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.