1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (09:40 IST)

ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் மிதந்த கரப்பான் பூச்சி

கோவையில் ஆவின் பால் அரை லிட்டர் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் மிதந்துள்ளது.
 
கோயம்புத்தூர் மரக்கடை தியாகராஜ புதுவீதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஆவின் பால் முகவர்கள் மூலமாக தினமும் காலை, மாலையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த கடையில், சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல ஆவின் பால் முகவர் அந்த மளிகை கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு சென்றார்.
 
அந்தக் கடையில், அரை லிட்டர் பால் பாக்கெட் ஒன்றை வாங்ய ஒருவர், அந்த பால் பாக்கெட்டிற்குள் ஏதோ மிதப்பதைப் பார்த்துள்ளார். உடனே அவர் கடைக்காரரிடம் பாக்கெட்டில் ஏதோ மிதக்கிறது என்று கூறியுள்ளார்.
 
அதை உற்று பார்த்த போது, அந்த பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி மிதப்பது தெரிந்தது. இது குறித்து கடைக்காரர் பாலை வினியோகித்த முகவரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதன் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.