வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (09:00 IST)

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி! என்ன நடக்குது காவல்துறையில்?

தமிழக காவல்துறையில் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் காரணமாக காவல்துறையினர் தற்கொலை செய்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். இடைவிடாத பணி, திடீர் பணிமாற்றம் ஆகியவையே காவல்துறையினர்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஒரு காவலரும், அயனாவரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலரும் அண்மையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. அதேபோல் சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் சமீபத்தில் சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்
 
இந்த தொடர் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாகை எஸ்பி அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சுகுணா என்பவர் நேற்று திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆயுதப்படைக்கு பணிபுரிய மாறுதல் வழங்கியதால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடமாற்றம் காரணமாக மனமுடைந்த சுகுணா, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.