வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 24 ஜனவரி 2015 (16:36 IST)

மணமேடையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒருதலை காதலன்

காதலிக்கு நடக்கவிருந்த திருமண மேடைக்கு வந்த காதலன் அங்கேயே மருந்து குடித்ததால் மயங்கி விழுந்தார்.
 

 
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, குரால்தொட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுதா (20, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பெங்களூரில் உள்ள கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், குரால்தொட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சாத்தப்பா மகன் ரமேசுக்கும் (22), நேற்று காலை சூளகிரியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
 
அப்போது மாதேஷ் (25) என்பவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 6 பேருடன் மண்டபத்திற்கு வந்துள்ளார். அவர்கள் உருட்டுக்கட்டை, மிளகாய்பொடி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
 
நள்ளிரவில், மணமகள் அறை அருகே மாதேஷ் நண்பர்கள் நடமாடியதால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவர்களை பிடித்து விசாரித்தபோது, மணப்பெண் சுதாவை கடத்திச்செல்ல ஆயுதங்களுடன் வந்திருப்பது தெரியவந்தது.
 
அவர்களில் விசாரிக்கும்போதே, 6 பேரில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மாதேஷ் மட்டும் கூட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார். இந்தநிலையில், நேற்று காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது கொண்டிருந்தது.
 
அப்போது திடீரென மணமேடைக்கு வந்த மாதேஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என சுதாவை மிரட்டினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதா அவரை ஏற்க மறுத்தார்.
 
உடனே, மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த விஷத்தை எடுத்து குடித்த மாதேஷ், அங்கேயே மயங்கி விழுந்தார். இதை கண்டு, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அவரை மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விசாரணையில், விஷம் குடித்த வாலிபர் மாதேஷ், சுதாவை ஒருதலையாக காதலித்தது தெரியவந்தது. இதனிடையே, மணமேடையில் நடந்த களேபரங்களை கண்ட மணமகனின் வீட்டார், திருமணத்தை நிறுத்தினர்.
 
மேலும், திருமணத்திற்கு வந்திருந்த மாதரசனப்பள்ளியைச் சேர்ந்த உறவுப்பெண் வித்யா (19) என்பவரை, மணமகன் ரமேசுக்கு திருமணம் செய்து வைத்தனர்.