வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (11:11 IST)

எடப்பாடிக்கு எதிராக மேலும் 44 எம்.எல்.ஏக்கள்? - தினகரனுக்கு ஆதரவா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


 

 
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே தேர்தல் ஆணையத்தின் கையில் சிக்கியிருக்கும் வேளையில், அவரால் நியமிக்கப்பட்ட எந்த நியமனங்களும் செல்லாது, அதேபோல், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது. மேலும், நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை தினகரன் தரப்பிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
அந்த கூட்டத்திற்கு அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 33 எம்.எல்.ஏக்கள், 35 அமைச்சர்கள் என மொத்தம் 68 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுகவில் 3 கூட்டணி எம்.எல்.ஏக்களோடு சேர்த்து, மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இதில் தினகரன் பக்கம் உள்ள 20 பேர் மற்றும் 3 கூட்டணி எம்.எல்.ஏக்களை கழித்தால், 112 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், 68 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். 44 பேர் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தினகரன் பக்கம் சாய உள்ளார்களா என்கிற சந்தேகம் எடப்படி தரப்பிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.


 

 
நேற்று செய்தியாளரிடம் பேட்டியளித்த தினகரன்  ஆதரவு எம்.எல்.ஏவான தங்க தமிழ் செல்வனும் இதை குறிப்பிட்டு பேசினார். அந்த கூட்டதில் 40 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்தே அவர்கள் யார் பக்கம் எனத் தெரிந்து கொள்ளலாம். மனதில் உள்ளதை பேச முடியாமல் பலர் உள்ளனர். விரைவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என அவர் கூறியிருந்தார். 
 
இதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு, கூட்டத்தை தவிர்த்த 44 எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரிடம் சத்தமில்லாமல் விசாரணையை தொடங்கியுள்ளதாம். அந்த பொறுப்பு அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது கூடுதல் செய்தி.