செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (10:13 IST)

முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர்: உயர் நீதிமன்றம்

2 ஆவது திருமணம் செய்துகொண்டாலும் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபா. இவருக்கும், மேனன்பாபு என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
 
இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற மூன்றரை வயது மகள் உள்ளார். மேனன்பாபு மதுவுக்கு அடிமையாகி, கடந்த 2013 ஆம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் மகளுடன், சுபா வசித்து வந்தார்.
 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சுசீந்திரன் என்பவருடன் 2 ஆவது திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து 3 ஆவது நாளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தை காவியாஸ்ரீயை, முதல் கணவர் மேனன்பாபுவின் தாயார் காளியம்மாள் மற்றும் சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டனர்.
 
இது குறித்து மணல்மேடு காவல்துறையிடம் சுபா புகார் செய்தார். இது குறித்து குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, தன் குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 
 
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, காளியம்மாள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
 
இந்தத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- 
 
முதல் கணவர் இறந்தபிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற திருமணம் சட்டவிரோதமானது இல்லை. தமிழக அரசு கூட விதவை மறுமணத்தை ஊக்குவிக்கிறது. 
 
சுபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தான்பெற்ற குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற உரிமை கொண்டாட முடியாது என்று காளியம்மாள் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது.
 
மேலும், சுபாவை திருமணம் செய்துள்ள சுசீந்திரனும், குழந்தையை பொறுப்புள்ள தந்தையாக பார்த்துக் கொள்வதாகவும், அவளுக்கு தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதாக இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
எனவே, மறு திருமணம் செய்துகொண்ட மனுதாரருக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளது. அவர்தான் முழு உரிமை படைத்த இயற்கையான பாதுகாவலர். 
 
எனவே, குழந்தையை காளியம்மாள் உடனடியாக சுபாவிடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு அனைத்து உதவிகளையும் மணல்மே காவல்துறையினர் செய்து கொடுக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.