வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (10:34 IST)

காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
செய்யார் அருகேயுள்ள பாளையம் கொக்கரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவருடைய மகன் லிங்கேஷ்குமார்.
 
22 வயதுடைய இவர் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை புளியந்தோப்பு பகுதியிலுள்ள தனது, பெரியம்மா வீட்டில் தங்கி இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.
 
தனது படிப்பு முடிந்த உடன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை லிங்கேஷ்குமார் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
 
மேலும், அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியதாகவும், இதனால் அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில், சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலறிந்து லிங்கேஷ்குமார் அவருடைய சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியதாக அந்த சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 
 
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், லிங்கேஷ்குமார் அவருடைய சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்பேரில் காஞ்சீபுரம் சென்ற காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. 
 
லிங்கேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த தமிழேந்தி என்ற பெண்ணை சென்னைக்கு வருவதற்கு முன்னரே காதலித்து வந்ததுள்ளார்.
 
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர், அந்த பெண்ணுடன் தலைமறைவான அவர், சென்னை பாரிமுனையில் அந்த பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
 
பின்னர், தனது காதல் மனைவியை காஞ்சீபுரம் அனுப்பிவிட்டு, சென்னை பாரிமுனை பகுதியில் பதுங்கியிருந்த லிங்கேஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவர் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து. கர்ப்பமாக்கியதாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர்.